search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம் மோசடி"

    திருமங்கலத்தில் போலி நகை கொடுத்து நகைக்கடையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம்- உசிலம் பட்டி சாலையில், ராதா கிருஷ்ணன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்தனர். பழைய நகையை கொடுத்து புதிய கே.டி.எம். நகை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    கடை ஊழியர்கள் புதிய நகைகளை காட்டினர். பழைய நகைகளை பெற்றுக் கொண்டு புதிய நகைகளை கொடுத்தனர். அதன் பிறகு பழைய நகைகளை சோதித்த போது, அது போலி நகை என தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள், பல்வேறு இடங்களில் இது போன்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மதுரை சோலையழகுபுரம் கணேசன் மனைவி மீனாட்சி, ஜெய்ஹிந்துபுரம் ஆறுமுகம் மகன் சசிகுமார் (40) ஆகியோர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரியவர, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
    திருமங்கலம் அருகே வியாபாரியிடம் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில், விளைபொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட குடோன் உள்ளது. இதனை கோர்வை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் மதுரையைச் சேர்ந்த பாரதி (41) என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட பல தானியங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் நாட்டில் இருந்து கண்டெய்னர்களில் வரவழைக்கப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 50 கிலோ கருப்பு சுண்டல், 80 ஆயிரத்து 130 கிலோ வெள்ளை சுண்டல் போன்றவை குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் ரெங்கராஜ் புகார் மனு அளித்துள்ளார். அதில், பங்குதாரர் பாரதி, அவரது நண்பர்கள் விருதுநகரைச் சேர்ந்த பிரேம்குமார், மரிய பாஸ்கர், கற்பகராஜ், புதுக்கோட்டை தமிழரசன், முதுகுளத்தூர் ஜெயச்சந்திரன், சென்னை கொடித்தோப்பு குணசேகர் ஆகியோர் சென்னை அக்ரோ நிறுவனம் பெயரில் குடோனில் இருந்த ரூ.2 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 400 மதிப்பிலான சுண்டலை கொள்முதல் செய்தனர்.

    இதற்காக ரூ.17 லட்சம் முன் பணம் கொடுத்த அவர்கள், மீதிப்பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர்.

    பலமுறை கேட்டும் 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

    புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×